ஆண்டவரே என் நம்பிக்கை


ஆண்டவரே என் நம்பிக்கை

          ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பவர் நீரின் அருகில் நடப்படும் மரத்துக்கு ஒப்பாவார்கள். (எரே 17:8) ஆண்டவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை துணையாளராம் தூய ஆவியின் அருகில் நம்மை அழைத்துச் சென்று அவரில் நம்மை வளர வைக்கிறது. ஏனெனில் தூய ஆவியே உயிர்ப்புனல் (யோவா 7:37) இறை நம்பிக்கை நம்மை ஆவியில் வளரச் செய்து செழிக்க வைக்கிறது. இறை நம்பிக்கையால் ஆவியின் கனிகளும், கொடைகளும், வரங்களும், நம்மில் நிரம்பித் ததும்பும்.


பிரச்சனைகளை வெல்லும் இறை நம்பிக்கை:

          இறை நம்பிக்கை உள்ள மனிதனாலேயே மட்டும்தான் பிறருக்கு நம்பிக்கை ஊட்டும் ஒளியாக மாற முடியும். இறை நம்பிக்கை உள்ள மனிதனால் மட்டுமே முடியாத காரியங்களை நிகழ்த்த முடியும். கடுகளவு நம்பிக்கை இருந்ததால் மலையளவு பிரச்சனைகளையும் ஆழ்கடலில் தூக்கி எறிந்து விடமுடியும். (மத் 21:21) நமது இறைநம்பிக்கையின் மூலம் பிறரது வாழ்க்கையில் உள்ள இன்னல்களில் இருந்து விடுவிக்கும் வழிகாட்டியாக நாம் மாற முடியும்.

          நமது செபம் இறை நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கும் போது நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் நீர ருகில் செழித்து வளரும் மரம், கனிகளும் மருந்துப் பொருள்களும் தருவது போல் நாமும் ஆவியானவரில் வளர்ந்து பிறருக்குப் பயன்தரும் வாழ்க்கை வாழ முடியும் (எசே 47 :12)


 நம்பிக்கைக்கு எதிரான சாபங்கள்:

          முதலாம் வகுப்பு மாணவன் படிக்கும்போது எதிர்கொள்ளும் சவாலை விட இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதிகமான சவாலை எதிர்கொள்கிறான். இவ்வாறு உயர்கல்விக்குச் செல்லச் செல்ல நமது சவால்களும் அதிகரிக்கின்றன. அவ்வாரே இறைவனை நெருங்க நெருங்க நமது சோதனைகள் அதிகரித்தாலும் சோதனைகளை இறைநம்பிக்கையின் மூலம் தகர்த்தெறியும் போது கிடைக்கும் பரிசும். ஆசீர்வாதங்களும் அதிகமாக இருக்கும். எனவே சோதனைகள் அதிகமாக இருந்தால், பிரச்சனைகள் அதிகரித்தால் நமது இறை நம்பிக்கையும் அதிகரிக்கிறது. அப்பொழுது நாம் வெற்றிவாகை சூடி நாம் பெறுகின்ற பரிசும் உன்னதரின் மகிமையை உலகுக்கு எடுத்துக் காட்டும்.


மனிதரில் நம்பிக்கை:

          மனிதரில் நம்பிக்கை வைப்போர் கனிகள் கொடுப்பதில்லை. தாங்களும் வறண்டு துன்புற்று பிறரையும் முட்களால் குத்தி வதைப்பர். எந்தக் கனிகளையும் அவர்கள் தருவதில்லை அவர்கள் தனிமை படுத்தப் படுகின்றனர். (எரே 17:5,6)

          மனிதரில் நம்பிக்கை வைப்போர் என்றுமே அச்சத்தால் பயந்து நடுங்குவர். மனிதர்களுடைய வாழ்வு நிலையற்றது. அவ்வாறு மனித நம்பிக்கையும் நிலையற்றது. தங்களது பயத்தை மறைக்க பிறரை அச்சுறுத்தும் மக்களாக இவர்கள் மாறுவார்கள். மாறாக இறை நம்பிக்கை தெய்வ பயத்தையும், ஞானத்தையும் வளர்க்கும் இறை நம்பிக்கை யோபுவையும், யூதித்தையும், எஸ்தர் அரசியையும், தாவீதையும் கனிதரும் மரங்களாக மாற்றியது.


ஒன்றுமில்லாமையில் இறைவனின் மகத்துவம்:

          குழந்தை பிறக்கும் போது தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அந்தக் குழந்தை வளர்வதற்கு பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று ஒரு சமூகத்தை இறைவன் உருவாக்கித் தருகிறார். ஒன்றும் அறியாத குழந்தை இறைவன் அளித்த சமூகத்தின் மூலம் அனைத்தையும் கற்று சமுதாயத்தில் தனக்கென்று உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. ஒன்றுமில்லாமல் இருந்து இறைவன் உலகத்தை உருவாக்கினார் (தொ.நு 1:12) எனவே மனிதனால் முடியாதது கடவுளால் கூடும்.  (லூக் 1:37) என்று நம்பிக்கையில் வளர்ந்து பிறரையும் வளர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்