பாலைநில அனுபவம் சோலைவனமாக


பாலைநில அனுபவம் சோலைவனமாக

          தொடக்கத்தில் இறைவனுக்குக் கீழ்ப்படிய மறுத்த தேவதூதன் அலகையாக மாறுகிறான். ஒளியாக இருந்த அவன் இருளாக மாறுகிறான். எனவே மனிதனைப் படைக்கும் போது அலகை கீழ்ப்படியாமையை விதைப்பான் என்று இறைவன் முன்னரே அறிந்திருந்தார். மனிதன் கீழ்ப்படிதலைப் பெற வேண்டும் என்று நன்மை, தீமை அறியும் மரத்தின் கனியை விலக்கி வைக்க அறிவுறுத்துகிறார். ( தொ.நூ 2:17 ) சோதனை ஏற்பட்டாலும் வெல்லும் சக்தியை மனிதன் பெற வேண்டும் என்றே அந்த மரமும், அதனைச் சார்ந்த கட்டளையும் உருவானது. கீழ்ப்படிந்தால் நமக்கு பரிசு வாழ்வு என்பதால் வாழ்வின் மரத்தின் கனியை உண்ண அனுமதி அளிக்கப்படுகிறது. சோதனையை வெல்ல முடியாமல் போகும்போது இரக்கமுள்ள கடவுள் தீமையை மட்டும் அளிக்கவில்லை; மாறாக தீமையை அனுபவிப்பதன் மூலம் நன்மையை நோக்கிப் பயணிக்க வழிகாட்டுகிறார்.

மாய அலகை:

          அலகை தந்திர மிக்கது; பொய்யன். அது நயவஞ்சகமாய் பேசி ஏவாளைத் தன் வலைக்குள் வீழ்த்துகிறது. ஆதிப் பெற்றோர் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டனர். ஆனால் ஏவாளிடம்விலக்கப்பட்ட கனியை உண்டால் கடவுளைப் போல மாறுவீர்கள்என்று பாவத்தை வசீகரமான சொற்களால் விதைத்து வசியப்படுத்துகிறது. ஏவாளுக்கும்தான் கடவுளைப் போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம்; இறைவார்த்தையைப் பெற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் நாம் தெய்வங்கள் தான்என்ற உணர்வு இல்லை. ( யோ 10:35 ) எனவே ஆதிப்பெற்றோர்களுக்கு கடவுளின் அன்பைச் சுவைக்கத் தெரியவில்லை. எனவே அலகை இறைவனின் நற்பண்பைக் குறைகூறி தான் எல்லாம் கற்றுக் கொடுப்பதாகவும், நல்லவனாகவும் மாறி அவர்களைத் தன் வலைக்குள் வீழ்த்துகிறது. போலி மாயையை ஏற்படுத்திப் பாவத்தில் சிக்க வைக்கிறது.

நல்ல ஆயன்:

          தினமும் திருப்பலி, திருவருட்சாதனங்களில் பங்கேற்று, அற்புதமான மறையுரைகள், தியானங்கள் இவற்றின் மூலம் நாம் நமது உலகக் காரியங்களைப் பெறுவது நமக்கும், பிறமதத்தினருக்கும் வித்தியாசம் காட்டாது. நாம் பெற்ற அனுபவங்கள், பிறரை எழுந்து பிரகாசிக்கச் செய்யத் தூண்ட வேண்டும். நோயுற்றதற்கு கட்டுப்போட்டு நலிந்ததைச் செழிப்பாக்கி இறைவன் விருப்பப்படி இறைவன் பின்னால் செல்ல நல்ல ஆயனாக நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். ( எசே 34:3-8 ) என்று இறைவன் எதிர்பார்க்கிறார். எல்லா இறை அனுபவங்களைப் பெற்றாலும் நாம் சுயநலப் போக்குடன் செயல்படும்போது இறைவன் நம்மீது மனவேதனைப்படுகிறார்.

          வேதனையில் உழன்று, நலிந்து இருப்போரைப் புகழ் எனும் ஆடையில் உடுத்தி, உள்ளம் நொறுங்கிக் காயம்பட்ட மனிதர்களை போராட்டங்களையும், சோதனைகளையும் வெல்லப் பலப்படுத்த வேண்டும். மாறாக அறிவுரைகள் எனும் பெயரில் மனதைப் புண்படுத்தி பலவீனப்படுத்திவிடக் கூடாது. இறைவனை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறரை அன்பு செய்ய முடியும். இதற்கு சிறந்த உதாரணம் அன்னை மரியா மானிடராய்ப் பிறந்தவரில் அன்னையைப் போன்று மூவொரு இறைவனை அன்பு செய்தவர் யாருமில்லை. இதற்கு மரியாவின் பாடலே ஓர் எடுத்துக்காட்டு. இறைவனை அன்பு செய்யக் கீழ்ப்படிதல் ஒரு சிறந்த கருவி. கீழ்ப்படியும் மனிதரால் தான் தெய்வ பயத்தால் நிரம்பி இறைத்திட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். அப்பொழுது தான் நமது நிறைகுறைகள் நமக்குப் புரிந்து நமது மாண்பும், நமக்கு இறைவன் வைத்திருக்கும் திட்டமும் புரியும். இறைத்திருவுளத்தோடு இணைந்து செயல்பட முடியும்.

தாயாம் திருச்சபை:

          திருச்சபை நமக்கு கீழ்ப்படிதலைக் கற்றுத் தருகிறது. பங்கு மக்கள் பங்குக் குருக்களுக்கும், பங்குக் குருக்கள் ஆயர்களுக்கும், ஆயர்கள் பாப்பரசருக்கும் கீழ்ப்படிய திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது அன்னை இறை அழைத்தலுக்குக் கீழ்ப்படியும் போது தன்னை அடிமை நிலைக்குத் தாழ்த்துகிறாள்.

கனிந்த உள்ளம்:

          கனிந்த உள்ளம் என்பது பிறரிடம் உண்மையாக இருப்பது - அவர்களது முன்னேற்றத்தை மட்டும் விரும்புவது ஆகும். “ நான் கனிவும், மனத்தாழ்ச்சியும் உடையவன்என்று இயேசு கூறுகிறார். இந்தக் குணங்களைப் பெற அவரது நுகத்தை நாம் சுமக்க நம்மை அழைக்கிறார். ( மத் 11:28-29 ) அவரது நுகம் என்ன? கனிவும், மனத்தாழ்ச்சியுடனும் நல்லாயனாக ஒவ்வொரு ஆட்டையும் தேடி அலைந்து நிலைவாழ்வு எனும் விண்ணக வாழ்வைப் பெற உண்மையாக உழைப்பது ஆகும்.

சோர்ந்து போகாதே:

          நாம் நமது துன்பங்களில் சோர்ந்து போவது நமது விசுவாச வாழ்வைக் கேள்விக்குறியாக மாற்றும். நாம் சிகரத்தை நோக்கிச் செல்லும் போது நம்மை வேதனைப்படுத்தும் சோதனைகள் அலகையின் தந்திர வெளிப்பாடுகள். நமது வளர்ச்சி இறைவனின் பாதையில் நடந்ததால் நமக்குக் கிடைத்த பரிசு என்று இறைவனைப் புகழும் போது சோதனைகள் விலகிவிடும். நம்மில் உள்ள நமது பாவங்களே நம் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் காரணம் ஆகும். ( யாக் 1:13,14 ) இவற்றிலிருந்து வெளிவர நாம் நம் பாவத்தை விட்டு விலக முயற்சி செய்ய வேண்டும். நம்மை அழுத்தும் துன்பங்கள் நமது பாவத்தை நாம் வெறுக்கத் தூண்டுதலாக உள்ளன. எனவே பாலைவன அனுபவம் நம்மை உண்மையில் சோலைவனத்தில் வாழவைக்கும் முயற்சியே.     
      
ஆகவே,
v  இறைவனுக்குக் கீழ்ப்படிவோம்.
v  தெய்வ பயத்தால் இறைத்திட்டத்தைப் புரிந்துக் கொள்வோம்.
v  இறைவனை அன்பு செய்வோம்.
v  நமது படைப்பின் மாண்பை உணர்வோம்.
v  பிறரை அன்பு செய்வோம்.

Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்